அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கிரந்தம் என்றால் என்ன?
வடமொழியினை எழுத தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எழுத்துமுறையே கிரந்தம் ஆகும். இந்தக் கிரந்தம் தமிழ் மொழிக்குள் புகுந்து, பிறகு இலக்கியங்களுள்ளும் புகுந்து ‘மணிப்பிரவாளம்’ உருவானது. இதுவே தமிழிலிருந்து மலையாளம் என்ற ஒரு தனி மொழி உருவாகக் காரணமாய் அமைந்தது. ‘தனித்தமிழ் இயக்கம்’ தோன்றிய பின் கிரந்தம் கலப்பு ஓரளவு குறைந்தாலும் ‘ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ, ஸ்ரீ’ போன்ற கிரந்த எழுத்துக்கள் இன்றும் தமிழோடு கலந்து எழுதப்படுகின்றன.
தமிழ் அல்லாத கிரந்த எழுத்துக்களான இவைகளை(‘ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ, ஸ்ரீ’) நாம் ஏன் & எப்படி தவிர்க்கவேண்டும் என்று விளக்குவதே இந்தப் பதிவின் நோக்கம்.
விக்கிப்பீடியாவில் கிரந்தம் பற்றிய விளக்கம்
——————————————————————————————
தமிழில் ஏன் கிரந்தம் தவிர்க்க வேண்டும்?
தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் என்று படித்தது நினைவிருக்கிறதா? உயிரெழுத்துக்கள் 12, மெய்யெழுத்துக்கள் 18, உயிர்மெய்யெழுத்துக்கள் 12×18 = 216 மற்றும் சார்பெழுத்தான ஆய்த எழுத்து ஒன்றின் கூட்டுத்தொகையே 247. இதில் கிரந்த எழுத்துக்களைச் சேர்கவில்லை.
கீழேயுள்ள சொற்றொடரைப் படித்து பாருங்கள். ஏன் கிரந்தம் தவிர்க்கவேண்டும் என்று உங்களுக்கே புரியும்.
“fரெண்ட்sக்குள்ள இதெல்லாம் jஆலி தானடா!”
ஆம், தமிழல்லாலாத எழுத்துக்களை தமிழ் எழுத்துக்களோடு சேர்த்தால் வாசிப்பதற்கு எவ்வளவு கடினமாக இருக்கிறது. நாம் ஆரம்பத்திலிருந்தே தமிழ் அல்லாத கிரந்த எழுத்துக்களை தமிழோடு சேர்த்து பார்த்து பழகிவிட்டதால் தான் இந்த உண்மை நமக்கு விளங்கவில்லை. “அதான் பழகிவிட்டோமே? ஏன் மறுபடியும் மாற்ற வேண்டும்?” என்பது தானே உங்களின் அடுத்த கேள்வி? ‘மொழியரசியல்’ தொடர்பான கேள்விகளுக்கு விடையளிக்காமல் தவிர்க்கலாம் என்றிருக்கிறேன்.
“வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்து சொல்லாகும்மே”
என்று தொல்காப்பியர் கூறியதைக் கொஞ்சாமாவது நினைவில் வைப்போம்.
இந்தப் பதிவும் இதை அறிவுறுத்துகிறது.
——————————————————————————————
கிரந்தத்தை எப்படி தவிர்க்கலாம்?
கிரந்தம் தவிர்ப்பதற்கு எளிய வழி கிரந்த எழுத்துக்கள் உள்ள சொற்களைத் தவிர்த்தல். ‘கிரந்த எழுத்துக்கள்’ கொண்ட எல்லாச் சொல்லும் வடமொழிச் சொல் தான். எனவே, அவற்றைப் பயன்படுத்துவதற்கு மாறாக அவற்றுக்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவது சாலச் சிறந்தது.
வடமொழிச் சொற்களை தவிர்த்தாலும் சில இடுகுறிப்பெயர்களை எழுதும் போது கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து எழுத வேண்டி வரும். சிலர் “சொற்களை மொழிபெயர்க்கலாம்/ஒலிபெயர்க்கலாம், பெயர்களை ஒலிபெயர்க்கலாமா?” என்று புதுமையான கேள்வி எழுப்புகின்றனர் (அதுவும், அந்தச் சிலரில் சிலருக்கு ஒலிபெயர்ப்புக்கும்(கிரந்தம் தவிர்), மொழிபெயர்ப்புக்கும்(தனித்தமிழ்) வேறுபாடு தெரிவதில்லை).
கிரந்தத்தின் துணையோடு எழுதினாலும் ‘Fyaz’ என்ற பெயரை எப்படி எழுதுவது? ஃபையாஸ்? இது அதே உச்சரிப்பையா தருகிறது? இல்லையே. பின்பு ஏன் கிரந்தம் தவிர்ப்பதால் உச்சரிப்பு சிறிது மாறுவதைப் பெரிதாக்க வேண்டும்? ‘ஃபையாஸ்’ என்று எழுதுவதற்கு பதிலாக ‘பையாசு’ என்று எழுதினால் குறைந்தது தமிழாவது பாதுகாக்கப்படும்.
நிகரெழுத்துப் பட்டியல்:
ஜ – ய/ச (சொல் முதலில்), ச (மற்ற இடங்களில்)
ஹ – அ (சொல் முதலில்), க (மற்ற இடங்களில்)
ஸ – ச (எங்கு வந்தாலும்)
ஷ – ச (சொல் முதலில்?), ட (மற்ற இடங்களில்)
க்ஷ – ச/ட
ஸ்ரீ – சிறீ/சீ
ஸ்,ஷ் – சு
ஒருவர் தன் பெயர் ‘ஜானி’ என்பதால் கிரந்தம் தவிர்க்க முடியாது என்று துவிட்டரில் தன் ஆதங்கத்தைக் காட்டினார். ‘ஜானி’ என்பதில் கிரந்தம் தவிர்த்தால் ‘சாணி’ கிடையாது; ‘யானி’. அரைகுறையாக தெரிந்துகொண்டு கிரந்தம் தவிர்ப்பவர்களைக் குற்றம் சொல்பவர்கள் நிறைய பேரை நான் துவிட்டரில் பார்த்திருக்கிறேன். அதேபோல ஒருவர் ‘ஹரிஹரன்’ என்பதற்கு கிரந்தம் தவிர்த்தால் ‘கரிகரன்’ என்று வருகிறது கிண்டலடித்தார். ஆனால், அது ‘கரிகரன்’ அல்ல; ‘அரிகரன்’. இது தொடக்கத்தில் குழப்பமாக இருக்கலாம். இதைக் குழப்பாமல் புரிந்து கொள்வதற்கு முடிந்தவரை இந்தப் பதிவு உதவியாய் இருக்கும்.
தமிழில் ஒவ்வொரு வல்லெழுத்தும் சொல்லின் தொடக்கத்தில் வெடிப்பொலியாகவும், இடையில்(வல்லின மெய் அருகில் வராதவரை) உரசொலியாகவும் வரும். அதாவது ‘கண்’ என்ற சொல்லில் ‘க’ – ‘Ka'(வெடிப்பொலி) என்று உச்சரிக்கப்படும். ‘பகல்’ என்ற சொல்லில் அதே ‘க’ – ‘ha'(உரசொலி) என்று உச்சரிக்கப்படும். ‘சுமை’ என்ற சொல்லில் ‘சு’ – ‘Chu’ என்று உச்சரிக்கப்படும். ‘பசுமை’ என்ற சொல்லில் ‘சு’ – ‘su’ என்று உச்சரிக்கப்படும். அதாவது தமிழ் மொழியிலேயே ‘ஹ'(ha) ஒலியும், ‘ஸ'(sa) ஒலியும் இருக்கிறது. ஆனால், அவைகளுக்கு தனித்தனி எழுத்தல்ல. ‘ja’, ‘ga’, ‘ba’, ‘fa’ போன்றவை எல்லாம் ‘அதிரொலி’. தமிழில் ‘ஞ்ச'(n’ja), ‘ஃக'(ga), ‘ஃப'(ba), ‘ஃவ'(fa) ஒலிகள் இருந்தாலும் இலக்கணப்படி அவை சொல் முதலில் வர முடியாது. இந்த ஒலிகள் ஆங்கிலச் சொற்களில் வருவதால் இதையும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம். தமிழ் மொழியில் ஒலிகளுக்கு குறைவில்லை என்பதைச் சொல்வதற்காகத் தான் இந்தத் தகவல்களைச் சொல்கிறேன்.
——————————————————————————————
கிரந்தம் தவிர்த்து பழக சில எடுத்துக்காட்டுகள்:
* ஜானி – யானி (மாற்றி சிந்தி!)
* ஸ்டாலின் – இசுடாலின் (‘இ’ போடவில்லை என்றால் ‘Chudaalin’ என்று ஆகிவிடும்!)
* குஷ்பு – குசுபு (இது கிண்டல் செய்வதற்காக அல்ல. உண்மையை ஏற்றுக்கொள்ள பக்குவம் வேண்டும்.)
* ஃபிரண்ட்ஸ் – பிரண்டுசு/விரண்டுசு(தேவையா? ‘நண்பர்கள்’ என்று எழுதலாம்!)
* ஃபிசிக்ஸ் – பிசிக்குசு (ஒன்றுமே மாற்றாமல் ‘pool’ என்ற ஆங்கிலச்சொல்லை தமிழில் எழுதினாலும் மோசமாகத் தான் ஒலிக்கும்!)
கிரந்த எழுத்துக்கள் வராவிட்டாலும் சில சொற்களுக்கு தமிழ் ஒலிப்புக்கு ஏற்றவாறு எழுத வேண்டிவரும்:
* ருவா – உருவா/ஓவா
* லத்திகா – இலத்திகா
* டபாங் – இடபாங்கு
* ட்விட்டர் – துவிட்டர்
* டீ – தேநீர் (‘தீ’ என்று எழுதமுடியாதல்லவா? :))
* டாட்டா – தாட்டா
* க்வாட்டர் – குவாட்டர்
* க்ரைம் – கிரைம்
இந்தச் சிக்கலுக்கு தனியாக இன்னொரு பதிவு தான் போடவேண்டும். கொஞ்சம் பொறுமை காக்கவும்!
——————————————————————————————
உச்சரிப்பு
கிரந்தத்தை எழுத்தில் தவிர்த்தால் மட்டும் போதாது. பேசும் போதும் தமிழ் உச்சரிப்போடு பேசுதல் நலம். ஏன் இப்படி சொல்கிறேன் என்பதை இந்தப் பதிவு உங்களுக்கு விளக்கும்.
சொல் முதலில் வரும் வல்லெழுத்து எப்பொழுதும் வலிந்து தான் ஒலிக்க வேண்டும்.
அதாவது,
சாலை – Chaalai
சந்தை – Chanthai
சங்கம் – Changam
ஆனால், ‘ஸ’வில் தொடங்கும் சொல் நிறைய தமிழுக்குள் புகுந்து விட்டது. ‘ஸபை’, ‘ஸப்தம்’, ‘ஸந்தேகம்’ போன்றவைகளை கிரந்தம் தவிர்த்து ‘சபை’, ‘சத்தம்’, ‘சந்தேகம்’ என்று ஏற்கனவே ஏற்றுக்கொண்டோம். ஆனால், பேசும் போது பழைய உச்சரிப்பிலேயே பேசியதால், தொடக்கத்தில் வரும் ‘ச’வும் ‘Sa’ என்று ஒலிக்கும் என்று குழம்ப தொடங்கிவிட்டோம். அதனால் தான் தமிழ்ச்சொல்லான ‘சங்கத்தையும்’ ‘Sangam’ என்று உச்சரிக்கிறோம். தமிழ் உச்சரிப்புக்கும் கவனம் செலுத்துவது நல்லது.
மாற்றுக்கருத்துக்கள் மற்றும் ஐயங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.
முந்தய இலக்கணங்கள்:
கொச்சின் தேவதாஸ்
திசெம்பர் 31, 2012
அன்பரே. வணக்கம்
எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
LikeLike
balaraman
திசெம்பர் 31, 2012
நன்றி திரு.தேவதாசு (கிரந்தம் தவிர்த்துள்ளேன்). உங்களுக்கும் என் உளம்கனிந்த வாழ்த்துக்கள்.
LikeLike
rajeshjothi
திசெம்பர் 31, 2012
இது நிச்சயம் பலரையும் சென்றடைய வேண்டிய மிக முக்கியமான பதிவு.கிரந்தம் குறித்த மிக எளிமையான விளக்கங்கள்,எடுத்துக்காட்டுகள் என இந்த வருட இறுதியில் உபயோகமான ஒரு பதிவை படித்த மன நிறைவு எனக்கு. நட்புடன்,இராசேசு 🙂
LikeLike
balaraman
திசெம்பர் 31, 2012
நன்றி நண்பா. பலரையும் சென்றடையும் என்று நம்புகிறேன்!
LikeLike
Muthu
திசெம்பர் 31, 2012
ஃபிசிக்ஸ் – பிசிக்குசு – அருமை 🙂
LikeLike
balaraman
ஜனவரி 1, 2013
நன்றிங்க. 🙂
LikeLike
இசையாளன் (@Isaiyalan)
ஜனவரி 1, 2013
எளிமையான விளக்கம். நல்ல பதிவு.
புத்தாண்டு வாழ்த்துகள் 🙂
LikeLike
balaraman
ஜனவரி 1, 2013
நன்றி நண்பா.
புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙂
LikeLike
saanu puthiran
ஜனவரி 1, 2013
Niraivaai Thamizhilakkanam kaatti sorsuvai thanaiyum sugappaduththiya umakku enthan manathaarntha nandrigal.
LikeLike
balaraman
ஜனவரி 1, 2013
உங்களுக்கு மனநிறைவு அளித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி.
LikeLike
Ramu
ஜனவரி 1, 2013
உங்களுடைய பதிவுகள் அருமை
LikeLike
balaraman
ஜனவரி 1, 2013
மிக்க மகிழ்ச்சி. நன்றி.
LikeLike
GiRa ஜிரா
ஜனவரி 1, 2013
அருமை. அருமை. நான் பின்பற்றுகின்றேனா இல்லையா என்பதை விட.. இந்தப் பதிவில் இருக்கும் உண்மையையும் சொல்லும் முறையையும் மிகமிக இரசித்தேன்.
கருத்தைச் சொல்வதில் ஒரு நேர்மையும் பொறுமையும் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சில பதிவுகளில் தன்னுடைய கருத்துதான் உண்மை என்பதை மாட்டைத் தார்க்குச்சியால் குத்துவது போல குத்திக் குத்திச் சொல்வார்கள். சிலர் கிண்டலடிப்பார்கள். அந்தத் தவறான வழிக்குப் போகாமல் இனி எழுதும் ஒவ்வொரு பதிவும் இப்படியே இருக்க வேண்டும் என்பதென் வேண்டுகோள்.
தமிழ் இலக்கணப் பணி தொடர்ந்து நடக்கட்டும்.
LikeLike
balaraman
ஜனவரி 1, 2013
நன்றிங்க. முடிந்தவரை அனைத்து சிக்கல்களையும் நடுநிலையிலிருந்தே அணுக நினைக்கிறேன்!
LikeLike
தியாகராசன்
ஜனவரி 1, 2013
ஆங்கிலப்புத்தாண்டில் ஓர் தமிழ் பரிசு…பள்ளியில் படித்த இலக்கணத்தை மீண்டும் நினைவு படுத்துவதற்கு நன்றிகள் 🙂
LikeLike
balaraman
ஜனவரி 1, 2013
நல்லது. 🙂
LikeLike
Iqbal Selvan
ஜனவரி 1, 2013
நல்ல பயனுள்ள பதிவு… தொடருங்கள் தமிழ் குறித்து எமக்கு அறியத்தாருங்கள். ஆனால் சங்கம் என்ற சொல் தமிழ் தானா, என்பது மட்டும் ஐயமாய் உள்ளது.
LikeLike
balaraman
ஜனவரி 1, 2013
நன்றிங்க.
நானும் ‘சங்கம்’ குறித்து ஒருமுறை சரிபார்க்கிறேன்.
LikeLike
iK way
ஜனவரி 1, 2013
திரு. பலராமன் அவர்களே,
நல்ல முயற்சி.
எனினும் சில இடங்களில் பெயர்களை தமிழ்ப்படுத்தல் பற்றி மாற்றுக்கருத்துக்கள் உள்ளன. பல நேரங்களில் அது தமிழ் ‘படுத்தல்’ ஆகிவிடுகிறது. இதனை புரிந்து கொள்ள நாம் அது போல தன் பெயர் மாற்றி உச்சரிக்கப்ப்படுவது கேட்டு வருந்தும் அந்த நபரின் இடத்திலிருந்தே பார்க்க வேண்டும்.
ஆங்கிலேயர் உச்சரிக்க முடியாமல் ஏற்பட்ட டின்னவேலி(Tinnevelly), டேஞ்ஜூர்(Tanjore), திருஷ்ணாபளி(Trichinopoly), Conjeevarom போன்றவை பின்னர் மாற்றப்பட்டதை எடுத்துக்காட்டாக கூறலாம்.
தமிழ் நாவிற்கு உச்சரிக்க வரவில்லையெனில் அதற்கு மாற்று அவர் பெயரினை மாற்றுவது அல்ல. வீடனனுக்கும், அனுமனுக்கும், சானகிக்கும் பொருந்துவது இப்போதும் பொருந்தவேண்டுமெனில் கடினமே.
ஃபிசிக்ஸ் = இயற்பியல்!!!
facebook.com = ஃபேஸ்புக்.காம் மட்டுமே. மூஞ்சிப்புத்தகமோ, முகநூலோ அல்ல.
இருக்கும் 247+1 எழுத்துக்களுக்குள் அடக்க வேண்டும் என கொண்டால் எப்பொழுதோ எழுதப்பட்ட நன்னூல் விளக்கத்திற்கும், தொல்காப்பியத்திற்கும் நீதி செய்யும் முயற்சியில் நடைமுறைச்சிக்கல்களை ஒதுக்கிவிடக் கூடாது.
தமிழிலும் தற்காலத்திய நடைமுறைப் பயன்பாட்டினை ஒட்டி நோக்க இடைவெளிகள் உண்டென்று கண்டால் ஒப்புக்கொண்டு முன் செல்லல் வேண்டும்.
நான் சொல்ல முனைந்ததை சுருக்கமாக ஓரளவிற்கு சொல்ல முடிந்ததாகவே எண்ணுகிறேன். நன்றி.
http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/
LikeLike
balaraman
ஜனவரி 1, 2013
உங்கள் கருத்துக்கு நன்றி. சீன மொழியிலுள்ள சில ஒலிகள் தமிழில் இருந்திருக்காது. அந்த ஒலிகள் வரும் சீனப்பெயர்களை எல்லாம் தமிழில் எப்படி எழுதுவது? கிரந்தம் தவிர்த்து தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஒரு பெயரை எழுதுவது ஒன்றும் குற்றமல்ல. இதைத் தான் மற்ற மொழிகளும் செய்கிறது. ‘தமிழ்’ என்பதை ஆங்கிலத்தில் ‘Tamil’ என்கிறார்கள். இல்லையென்றால் ‘Thamizh’ என்கிறார்கள். Zh == ழ்?
//இதனை புரிந்து கொள்ள நாம் அது போல தன் பெயர் மாற்றி உச்சரிக்கப்ப்படுவது கேட்டு வருந்தும் அந்த நபரின் இடத்திலிருந்தே பார்க்க வேண்டும்.//
வேற்று மொழியினர் மாற்றி உச்சரித்தால் வருந்த மாட்டேன். சொல்லிக் கொடுப்பேன். அவர்களின் மொழியையும் மதிப்பதால் அவர்கள் உச்சரிப்புக்கு விட்டுவிடுவேன்.
http://en.wikipedia.org/wiki/Exonym_and_endonym
//தமிழ் நாவிற்கு உச்சரிக்க வரவில்லையெனில் அதற்கு மாற்று அவர் பெயரினை மாற்றுவது அல்ல. வீடனனுக்கும், அனுமனுக்கும், சானகிக்கும் பொருந்துவது இப்போதும் பொருந்தவேண்டுமெனில் கடினமே//
அன்று பொருந்தியது இன்று ஏன் பொருந்தாது? பு.த.செ.வி.
//ஃபிசிக்ஸ் = இயற்பியல்//
‘ஃபிரண்ட்ஸ்’-ஐ’நண்பர்கள்’ன்னு எழுதலாம்னு சொல்லும் போதே இந்தக் கருத்த சொல்லிட்டேன். அதான் வேறொரு கருத்த சொன்னேன். ‘இயற்பியல்’ன்னு எழுதினா இன்னும் மகிழ்ச்சி. 🙂
//facebook.com = ஃபேஸ்புக்.காம் மட்டுமே. மூஞ்சிப்புத்தகமோ, முகநூலோ அல்ல.//
‘facebook’ என்பதை ‘முகநூல்’ என்று facebook நிறுவனமே ஏற்றுக்கொண்டுவிட்டது. facebook-ஐ தமிழில் பயன்படுத்தி பாருங்கள். அப்படியே endonym,exonym பற்றியும் படியுங்கள்.
//இருக்கும் 247+1 எழுத்துக்களுக்குள் அடக்க வேண்டும் என கொண்டால் எப்பொழுதோ எழுதப்பட்ட நன்னூல் விளக்கத்திற்கும், தொல்காப்பியத்திற்கும் நீதி செய்யும் முயற்சியில் நடைமுறைச்சிக்கல்களை ஒதுக்கிவிடக் கூடாது.//
தமிழை விட பரவலாக பேசப்படும் ஆங்கிலத்துக்கு இன்றும் 26 எழுத்துக்கள் தான்.
//தமிழிலும் தற்காலத்திய நடைமுறைப் பயன்பாட்டினை ஒட்டி நோக்க இடைவெளிகள் உண்டென்று கண்டால் ஒப்புக்கொண்டு முன் செல்லல் வேண்டும்.//
அந்த இடைவெளிகளை நிரப்ப தமிழில் புது தொழில்நுட்பச் சொற்களை உருவாக்க வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ‘கம்பியூட்டர்’ இருக்கும் போது ‘கணினி’ எதற்கு என்று கேட்பார்கள்!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
LikeLike
T.A.Palani
ஜனவரி 3, 2013
பலராமன் அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களைப் போல் தமிழ்ப்பற்று உள்ளவர்களால் தமிழ் என்றென்றும் வாழும். கிரந்த மொழியின் தாக்கம் தமிழில் கூடுதலாகவே உள்ளது. பழக கடினம் என்றாலும் பின்பற்றியே ஆகவேண்டும்.
LikeLike
balaraman
ஜனவரி 4, 2013
நன்றிங்க. நானும் வேண்டிய முயற்சிகள செஞ்சுட்டு இருக்கேன்.
LikeLike
S. Dhandapani
ஜனவரி 4, 2013
பயனுள்ள பதிவுக்கு நன்றி. நானும் பின்பற்ற முடிவு செய்துள்ளேன்
LikeLike
balaraman
ஜனவரி 5, 2013
மிக்க மகிழ்ச்சி. நன்றி.
LikeLike
Janakiraman S
ஜனவரி 5, 2013
பல நாள் கடின வேலைக்கு பிறகு, ஒரு நல்ல பதிப்பை வாசிக்க வைத்தமைக்கு நன்றி !!! மேலும் பலருக்கும் புரியாத கடினமான ‘கிரந்தம்’ பற்றி மிக எளிதான முறையில் அனைவரும் புரியும் படி பதித்ததற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் !!!
சரி, என்னுடைய பெயர் சானகிராமனா அல்லது யானகிராமனா ???
LikeLike
balaraman
ஜனவரி 5, 2013
நன்றி அண்ணா. ‘சானகிராமன்’ சரி. ‘சானி’ என்பது சொல்ல இனிமையாக இல்லாததால் ‘யானி’ என்று மாற்றியும் சொல்லலாம் என்பதற்கு தான் அந்த ‘மாற்றி சிந்தி’ தகவல்.
LikeLike
seenivasan
ஜனவரி 6, 2013
அருமையான பதிவு ,நன்றிகள்,வாழ்துக்கள்.அன்புடன் சீனிவாசன்
LikeLike
seenivasan
ஜனவரி 6, 2013
கம்பரும் விபீசணனை வீபீடணன் என்றும் இலட்சுமணனை இலக்குமணன் என்றும் அழைத்ததை கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
LikeLike
balaraman
ஜனவரி 6, 2013
வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
LikeLike
T.A.Palani
ஜனவரி 6, 2013
இலக்குவன் என்றும் அழைக்கலாம்.
LikeLike
San Thiru
ஓகஸ்ட் 4, 2014
கூடிய மட்டும் சொந்த மொழிச்சொற்களை பயன்படுத்த விரும்பும் என் போன்ற அனைவருக்கும் இந்த கட்டுரை ஒரு இளைப்பாறல்…
அருமையான நடை உங்கள் எழுத்தில்…
நான் வாசித்துக்கொண்டிருப்பது என் கல்லூரித் தோழனின் கட்டுரை என்பது மறந்து, ஒரு தேர்ந்த எழுத்தாளனின் ஆளுமையை நுகர்கிறேன்…
உனக்கே உரித்தான நகைச்சுவையை மிக ரசித்தேன்…
LikeLike
balaraman
ஓகஸ்ட் 4, 2014
இதக் கேக்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நன்றி டா.
LikeLike
Would-Be Yogi (@wouldbe_yogi)
பிப்ரவரி 12, 2017
மொழித்தூய்மை என்றால் கல்வெட்டுத்தமிழைத் தான் கொண்டுவரவேண்டும்! ஜானி – யானி என்பது நியூமராலஜியை விட கொடுமையானது! நீங்கள் காபியை குளம்பி என்றுதான் கூறிக்கொண்டிரிக்கிறீர்களா?
LikeLike
balaraman
பிப்ரவரி 12, 2017
பதிவில் எழுதும் போது காப்பியை குளம்பி என்று தான் எழுதுவேன். அது போக அதுக்கும் “கிரந்தம் தவிர்ப்பதுக்க்கும்” தொடர்பே தொடர்பேயில்ல!
LikeLike
_vjy
பிப்ரவரி 12, 2017
ருபாய் (Sanskrit) – வெள்ளி (Tamil). வெள்ளி word usage is very common in Singapore.
LikeLike
க. ப
மே 14, 2019
தூய தமிழுக்குப் போராடும் நீங்கள் பிழையிலாத் தமிழ் ஆளப் பழகலாமே
LikeLike
balaraman
மே 21, 2019
கண்டிப்பா. நானும் அதுக்கு தான் முயற்சி செய்றேன். எதாவது தவறா இருக்கா?
LikeLike