சிறிது காலமாகவே தமிழ்நாட்டில் கிளர்ச்சியைத் தூண்டிய சொல் – பேலியோ. பேலியோ என்பது குகைமனிதன் உணவுமுறையைக் குறிக்கும். இதைக் குறைமாவு நிறைகொழுப்பு உணவுமுறை என்றும் அழைக்கலாம். அதாவது மாவுச்சத்துள்ள உணவுகளை மிகவும் குறைத்துக்கொண்டு கொழுப்புச்சத்துள்ள உணவுகளை மிகுதியாக உண்பது தான் இந்த பேலியோ உணவுமுறை.
பேலியோவைப் பற்றி தெரிந்துகொள்ள தமிழிலேயே எண்ணற்ற தளங்கள் உள்ளன. இந்தப் பதிவின் நோக்கம் அதை விளக்குவதல்ல. பேலியோ ஏன் ஒரு புரட்சி இயக்கம் போல் தோற்றமளிக்கிறது என்பதை இருமுனையில் இருந்தும் அலசிப்பார்ப்பதே இந்தக் கட்டுரையின் இலக்கு.
இந்தக் குறைமாவு நிறைகொழுப்பு உணவுமுறையை தமிழகமெங்கும் பரப்பியதில் பெரும் பங்கு “ஆரோக்கியம் & நல்வாழ்வு” குழுவைச் சேரும். இந்தக் குழுவின் மேலாண்மையரில் ஒருவரான நியாண்டர் செல்வன் தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு சென்று மாநாடு நடத்தி பேலியோ உணவுமுறைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்தக் குழுவிலேயே பல மருத்துவர்களும் உள்ளனர். அதில் மருத்துவர் புருனோ இந்த உணவுமுறையைப் பற்றி நிறைய தகவல்கள் எழுதி வருகிறார்.
ஒருவேளை இறைச்சியை முன்னிறுத்தி இந்த உணவுமுறை இருப்பதால் இதை எதிர்ப்பரசியலாக சிலர் நினைக்கலாம். இதற்காகவே அந்தக் குழு இறைச்சி சாப்பிடாதவர்களுக்கும் தனி உணவுப்பட்டியல் தருகிறது. பேலியோ உணவுமுறையில் நிறைய விலைமதிப்பு கொண்ட உணவுப்பொருட்கள் உள்ளன என்று சிலர் குறைகூறுகின்றனர். அவர்கள் பரிந்துரைப்பது போல மது, புகைப்பழக்கங்களை நிறுத்திவிட்டு வெளியில் சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டு பேலியோ பின்தொடர்ந்தால் செலவு ஒன்றும் கூடாது. மறைமுகமாகக் கூட எந்த ஒரு உணவு வணிகத்தையும் இவர்கள் ஆதரிப்பதாகத் தெரியவில்லை.
பல்லாயிரக்கணக்கோர் உள்ள அந்த “ஆரோக்கியம் & நல்வாழ்வு” முகநூல் பக்கத்தில் கிழமைக்கு ஒருமுறையாவது இந்த உணவுமுறை மூலம் பயன்பெற்றததாக பகிர்ந்துகொள்வர். நிறைய பேர் உடல் எடை குறைந்ததை ஒளிப்படங்களோடு பகிர்கின்றனர். நீரிழிவு நோய் கட்டுக்குள் வருவதாக சான்றோடு பகிர்கின்றனர். ஆனால், பேலியோ கடைப்பிடித்ததால் உடல்நலம் குன்றியதாக யாரேனும் சான்றோடு சொல்லியிருக்கிறார்களா?
மேலே திரு. என். சொக்கன் கூறியது போல் பேலியோ பின்தொடர்பவர்கள் அதைப் பற்றி பேசிக்கொண்டே இருக்க நிறைய காரணங்கள் உண்டு. அதை எதிர்க்கவோ கிண்டலடிக்கவோ தான் பெரிதாகக் காரணம் எதுவும் இல்லை.
பேலியோ என்பது அரசியல் இல்லையெனில் ஏன் புரட்சி இயக்கம் போல் செயல்பட வேண்டும். “ஆரோக்கியம் & நல்வாழ்வு” குழு வெறும் பரிந்துரைத் தளமாகவோ, யாரையும் ஏமாற்றாத வணிகமாகவோ செயல்படுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், உட்கொள்ளும் கொழுப்பு புரட்சியாக வெளிவர வேண்டுமென்பது தேவையில்லை.
பின்குறிப்பு: 2 திங்களுக்கு நானும் இந்தக் குகைமனித உணவுமுறையைக் கடைப்பிடித்தேன். உடல் எடையில் 5 கிலோ குறைந்தேன். சில காரணங்களால் என்னால் அந்த உணவுமுறையைத் தொடர முடியவில்லை. ஆனால், மீண்டும் என்றேனும் தொடங்கும் எண்ணத்துடனே இருக்கிறேன். இதனால் நான் கொழுப்பு பிடித்தவன் என்று நீங்கள் எண்ணினால் அது தவறில்லை.
திண்டுக்கல் தனபாலன்
நவம்பர் 4, 2016
அனைவரும் தொடர்வது சந்தேகம் தான்…
விளக்கங்களுக்கு நன்றி…
LikeLike
Sp.Duraisamy
நவம்பர் 4, 2016
See the elephant ,herbivorous .see tiger the carnivorous
LikeLike
GiRa ஜிரா
நவம்பர் 4, 2016
பேலியோ என்று இன்று அழைக்கப்படும் உணவுப்பழக்கத்தின் மீது எனக்கு ஆதரவும் இல்லை. எதிர்ப்பும் இல்லை. ஆனால் எப்படி பொது உணவின் மேல் ஐயங்களும் கருத்துகளும் உண்டோ, அதே போல மாவில்லா உணவுமுறை மீதும் உண்டு.
எனக்கு இந்த உணவு முறையை பேலியோ என்று அழைப்பதில் ஏற்பில்லை. பேலியோவில் வாழ்ந்த குகை மனிதனின் உணவுமுறை என்று அழைக்கப்படும் இந்த உணவுமுறையில் பேலியோத்தனம் எதுவுமில்லை என்பது என் புரிதல். நியோபேலியோ என்று சொல்லிக் கொள்வார்களானால் எனக்கு மறுப்பில்லை.
வேட்டையாடி உண்ட குகைமனிதன் சமைத்துச் சாப்பிட்டிருப்பானா என்பதே பெரும் ஐயம். ஒருவேளை நெருப்பில் எதையாவது வாட்டி உண்டிருக்கலாம். அதே நேரத்தில் ஒருநாளில் எத்தனை முறை உணவு உண்டிருப்பான் என்பதும் மிகப்பெரிய கேள்வி. கிடைத்த போது உண்ட குகை மனிதனின் உணவுமுறைக்கும் மூன்று முறை உண்பதற்கு அட்டவணை கொடுப்பதற்கும் எப்பொருத்தமும் இல்லை என்பதென் தெளிவு.
அத்தோடு பேலியோ மனிதனின் உடலுழைப்புக்கும் நம்முடைய இக்காலத்து உணவுமுறைக்கும் மிகப்பெரிய இடைவெளியும் உள்ளது. பேலியோ உண்டால் உடல் உழைப்பு தேவையில்லை என்று யாரும் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் முறையான உடலுழைப்பு இருந்தால் பேலியோவுக்கு மாறவேண்டியதில்லை என்றும் நினைக்கிறேன்.
அசைவப்பேலியோவைக் கூட என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சைவப்பேலியோவை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. நிறைய பதிவுகளையும் விளக்கங்களையும் படித்தாலும் என்னுடைய மண்டையில் ஏறவில்லை. பாதாம் பருப்பை வறுத்துச் சாப்பிடுவது எப்படி குகைமனிதனின் உணவுப்பழக்கமாகும் என்பதைப் புரிந்து கொள்ளும் அறிவும் எனக்கில்லை. இப்படியான பல காரணங்களினால்தான் இந்த உணவுப்பழக்கத்தை பேலியோ என்றழைக்க யோசனையாக இருக்கிறது. மாவில்லா உணவுமுறை என்று என் புரிதலுக்காக அழைத்துக் கொள்கிறேன்.
சரி.. பெயரை விட்டுவிடுவோம். உணவுப்பழக்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்றும் சொல்லிவிடுகிறேன்.
உணவுப்பழக்கம் ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமாக ஒத்துக்கொள்ளும். அவரவர்களுக்கு ஒத்துக்கொள்வது கொள்ளாதது என்று புரிந்து உணவுப்பழக்கத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். அதே போல முடிந்தவரை உடலுழைப்பும் தேவை. உடலுக்குத் தேவையான சத்துக்கள் கொண்ட சமநிலை உணவும் உடலுழைப்பும் உணவின் அளவும் மிகக் கவனமாக ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியவை.
பலவித காரணங்களால் உடல் பருத்தவர்கள் பொது இடங்களிலும் பள்ளி கல்லூரிகளிலும் தாழ்வு மனப்பாங்கோடு இருந்திருப்பார்கள். அந்தத் தாழ்வு மனப்பாங்கு நீக்க மாவில்லா உணவுமுறை பலருக்கும் உதவியதில் மிக்க மகிழ்ச்சி. நீரிழிவு நோயும் பலருக்குக் கட்டுப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.
இந்த மாவில்லா உணவுமுறை உண்மையிலேயே மிகச்சரியான முறையாகக் கூட இருக்கலாம். ஆனால் இதை முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒரு மருந்து முழுமையாகப் பயன்பாட்டுக்கு வர பத்து வருடங்கள் ஆகின்றன. புதிய முறை உணவுப்பழக்கத்துக்கும் சாதக பாதகங்கள் புரிய பத்து ஆண்டுகளாவது ஆகும். ஆனால் மாவில்லா உணவுமுறையை முறைப்படி ஆராய்ந்து முடிவு சொல்ல யார் வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
எந்தப் புதுக்கருத்து வந்தாலும் எதிர்ப்புகளும் வருவது வழக்கம். மாவில்லா உணவுமுறை மீதும் தீவிர எதிர்ப்புகளைப் பார்க்கிறோம். நாம் நண்பர்களை விட எதிர்களைத்தான் எதிர்நோக்க வேண்டும். அவர்களிடம் இருந்து வருகின்ற கேள்விகளும் தாக்குதல்களும் நம்மிடமிருக்கும் கருத்தை இன்னும் பட்டை தீட்டும். நம்மிடம் நேர்மை இல்லாத போதுதான் எதிரிகளின் மீது தாக்குதலில் இறங்குவோம். ஆகவே பட்டை தீட்டிக்கொண்டு முன்னேற விரும்புகிறவர்கள் எதிரிகளுக்குத்தான் முதல் நன்றியைச் சொல்ல வேண்டும்.
மாவில்லா உணவுமுறையும் எதிரிகளின் எதிர்ப்புகளைப் படிக்கல்லாக்கிக் கொண்டு முன்னேறி வருமா என்பதைத் தீர்மானிக்கப் போவது காலம் தான். ஆகையால் அவரவருக்குத் தக்க வகையில் உணவுப்பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
மாவில்லா உணவுமுறையை இப்போதைய நிலையில் என்னால் பின்பற்ற முடியாது. ஆனால் வெள்ளைச் சர்க்கரை, இனிப்புகள், பால் (தயிர், மோர், வெண்ணெய், நெய் அல்ல), காப்பி, குளிர்பானங்கள் ஆகியவற்றை விலக்கிவிட்டேன். முடிந்த வரை ஜங்க் எனப்படும் தீய உணவுகளை உண்பதில்லை. இப்போதைக்கு என்னால் முடிந்தது இவ்வளவுதான்.
எங்காவது போனால் உபசரிப்பில் இனிப்புகளும் காப்பியும் வரும் போது சாப்பிடுவதில்லை என்று சொல்வது வழக்கமாகிப் போனதால் மாவில்லா உணவுப்பழக்கம் உள்ளவர்கள் வெளியில் போகும் போது படும் சிரமத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
நல்லதைச் சாப்பிடுங்கள். நன்றாகச் சாப்பிடுங்கள். நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஆண்டவன் அருள் அனைவருக்கும் ஆகட்டும்.
LikeLiked by 1 person