வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?
“வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா?” – இந்தக் கேள்வி இன்று பல தமிழ்வல்லுனர்களுக்கே குழப்பமாக இருக்கிறது. இதனால், இதைக் குறித்து நான் படித்து அறிந்தவற்றை நான் இந்தப் பதிவில் பகிர்கிறேன்.
தமிழில் ‘கள்’ தவிர வேறு எத்தனையோ விகுதிகள் இருந்தாலும், இந்த ‘கள்’ விகுதி தரும் குழப்பம் இருக்கிறதே….! ஐயய்யய்யய்யோ…
பள்ளியில் படிக்கும் பொழுது தமிழ்த்தேர்வில் ‘பகுபத உறுப்பிலக்கணம்’ என்று ஒரு கேள்வி வரும். அதுக்காக, ப.ச.வி.இ.சா.வி என்று நான் மனப்பாடம் செய்ததும் உண்டு!
ப.ச.வி.இ.சா.வி —> பகுதி,சந்தி,விகாரம்(அலங்கடை),இடைநிலை,சாரியை,விகுதி
பகுக்கக்கூடிய தமிழ்ச்சொற்களில்(பகுபதம்), பகுதி போக வேற ஏதாவது ஒரு உருபாவது இருக்கும்.
எ.கா: வந்தனன் = வா(வ) + ந் + த் + அன் + அன்
இந்த உறுப்புகள் ஒரு பதத்தின் காலத்தை உணர்த்துவதற்கும், ஒருமை/பன்மை, தன்மை/முன்னிலை/படர்க்கை போன்ற நிலைகளை உணர்த்துவதற்கும் பயன்படுகின்றன.
கள்ளில் வந்த குழப்பம்:
‘கள்’ என்பது பன்மையை குறிக்கும் ஒரு விகுதியாக மட்டும் இல்லாமல் ‘பனம்பூ வடிச்சாறு’ எனும் பொருள் தரும் தனிச்சொல்லாகவும் இருக்கிறது. எனவே, ‘கள்’ என்ற விகுதி ஒரு சொல்லோடு சேரும் போது அந்தச் சொல் என்னவாகும், ‘கள்’ என்ற சொல் அதேச் சொல்லோடு புணரும் போது அந்தச் சொல் என்னவாகும் என்பது தான் குழப்பமே.
வாழ்த்து+கள்(சொல்) – வாழ்த்துக்கள்
வாழ்த்து+கள்(விகுதி) – வாழ்த்துக்கள்/வாழ்த்துகள்
வேண்டுமென்றே தவறாகப் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் ‘வாழ்த்துகள்'(‘க்’ இல்லாமல் சேர்ந்தது) என்ற சொல்லையும் தவறாகப் புரிந்துக்கொள்ளலாம்.
‘வாழ்த்துகள்’ என்ற சொல்லை ஒரு வினைத்தொகையாக பார்க்கலாம்! (‘ஊறுகாய்’ போல – ஊறுகின்ற காய், ஊறின காய், ஊறும் காய் என முக்கால வினைகளையும் குறிக்கும்)
வாழுகின்ற துகள், வாழ்ந்த துகள், வாழும் துகள் என்று உணர்த்தி வரும் இந்தச் சொல்லை ‘நுண்ணுயிரி’ என்று பொருள் கொள்ளலாமா? 😉
‘கள்’ என்பது விகுதி தான், அது சொல் போல் புணராது என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி – “பூக்கள் சரியா? பூகள் சரியா?”
அப்படியென்றால் ‘வாழ்த்துக்கள்’ என்பதை எப்படி புரிந்துக்கொள்வது? பன்மை சேர்த்த ‘வாழ்த்து’ என்றா? வாழ்த்து சொல்லிவிட்டு அருந்தப்படும் ‘கள்’ என்றா?
‘பூக்கள்’ – பூவிலிருந்து எடுக்கப்படும் ‘கள்’, அதாவது ‘தேன்’ என்று புரிந்து குழம்பியிருக்கோமா? ஒரே சொல் பல பொருள்களில் வருவதுண்டு. எ.கா: ‘அரவம்’ என்னும் சொல் ‘ஒலி’ மற்றும் ‘பாம்பு’ என்று இரண்டு பொருள்களில் வரும்!
அரவம்(பாம்பு) தீண்டிய வலி தாங்காமல் அவன் எழுப்பிய அரவம்(ஒலி) என் காதுகளை பதம் பார்த்தது.
எனவே ஒரு சொல்லைச் சுற்றியிருக்கும் மற்றச் சொற்களைப் பொறுத்து தான் அந்தச் சொல் தரும் பொருளை தெளிவாகப் புரிந்துக்கொள்ள முடியும்.
“வாழ்த்துக்கள்” சரி என்பதற்கான சான்றுகள்:
“எழுத்துக்கள்”, “வாழ்த்துக்கள்” போன்ற சொற்களை பல தமிழறிஞர்கள் பயன்படுத்தி உள்ளனர்.
* தொல்காப்பியத்துக்கு உரை கண்ட நச்சினார்க்கினியர்
* இளம்பூரணர்
* மணக்குடவர்
* சேனாவரையர்
* பரிமேலழகர்
* ஈழத்துச் சைவத் தமிழறிஞர் – ஆறுமுக நாவலர்
‘கள்’ விகுதி சேரும் பொழுது எங்கே ‘க்’ மிகும்/மிகாது என்று தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பட்டியலிட்டுள்ளது.
‘கள்’ விகுதி சேரும் பொழுது ‘க்’ மிகும்/மிகா இடங்கள்:
‘உ’வில் முடியும் சொற்களைப் பற்றி மட்டும் தான் கீழே பார்க்கப் போகிறோம்.
1) “க்” மிகலாம்
* மூவெழுத்து, அதற்கும் அதிகமான எழுத்துள்ள உகரச் சொற்கள் ஒற்றோடு வந்தால் மிகலாம்(கவனிங்க: “மிகணும்” என்று சொல்லவில்லை, “மிகலாம்”)
முத்துக்கள், எழுத்துக்கள், வாழ்த்துக்கள், பழச் சத்துக்கள்
முத்துகள், எழுத்துகள், வாழ்த்துகள், பழச் சத்துகள்
2) “க்” மிகணும்
* ஈரெழுத்துச் சொற்கள் குறிலாக வந்தால் மிகணும்!
பசுக்கள், அணுக்கள், தெருக்கள்
* ஓரெழுத்துச் சொற்கள் வந்தால் மிகணும்!
பாக்கள், ஈக்கள், மாக்கள், பூக்கள்
அலங்கடைகள்: ஐ-யில் முடியும் ஓரெழுத்துச் சொற்கள் – பைகள், கைகள் (ஒரெழுத்து எனினும் ‘க்’ மிகவில்லை!)
3) “க்” மிகவே கூடாது
* ஈரெழுத்துச் சொற்களில் முதலெழுத்து நெடிலாக வந்தால் மிகாது!
வீடுகள், மாடுகள், ஓடுகள்
* ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்களுக்கு மிகாது
கொலுசுகள், மிராசுகள், தினுசுகள்
* அது ஓரெழுத்தோ, ஈரெழுத்தோ, பல எழுத்தோ, “வு” வரும் போது மட்டும், மிகவே கூடாது!
ஆய்வுகள், நோவுகள், தீவுகள், உராய்வுகள்
‘கள்’ தரும் இன்னொரு குழப்பம்:
சிலர் ‘நாட்கள்’ தவறு என்று கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் ‘சொற்கள்’,’மரங்கள்’ சரி என்று ஒப்புக்கொள்கிறார்கள். கூர்ந்து நோக்கியபோது ஒன்று புலப்பட்டது. சரியா? அல்லது தவறா? என்று உறுதியாகத் தெரியவில்லை.
மெய்யெழுத்துக்கு முன் குறில் வந்தால் அந்த மெய்யெழுத்து ‘கள்’ விகுதியுடன் சேர்ந்து திரியும்(ல ~ ற,ள ~ ட,ம ~ ங).
(எ.கா) சொற்கள், பொருட்கள், மரங்கள்
மெய்யெழுத்துக்கு முன் நெடில் வந்தால் அந்த மெய்யெழுத்து ‘கள்’ளுடன் சேராது.
(எ.கா) கால்கள், நூல்கள், கடாம்கள், கோள்கள், நாள்கள் (ஆனால், நாட்கள் என்ற சொல்லையும் பலர் பயன்படுத்தியிருக்கின்றனர்!)
பிற மெய்யெழுத்துக்கள் குறில் வந்தாலும்/நெடில் வந்தாலும் திரியாது:
(எ.கா) பொய்கள், காய்கள், பெண்கள், சுவர்கள், தேர்கள், கடன்கள்
ஆனால், இந்த ‘ல்’ எல்லா இடங்களிலும் ‘ற்’ ஆக திரிவதில்லை. ஓரெழுத்துக் குறில் முன்னால் வந்தால் மட்டுமே திரியும் என்று தோன்றுகிறது.
(எ.கா) மயில்கள், கடல்கள், பதில்கள்
போலிகள்:
தமிழில் நிறைய போலிகள்(போலி-போலிருப்பவை) இருக்கின்றன.
கறுப்பு-கருப்பு இரண்டும் நிறத்தைக் குறிக்கும் சொற்களே என்று சிலர் சொல்கின்றனர்.
கருத்தல் = தானாகக் கருமை நிறம் பெறுதல்;
கறுத்தல் = பிறவினையால் கருமை நிறம் பெறுதல்;
என்று ‘வளவு’ இராம.கி ஐயா விளக்கம் கொடுத்திருகிறார்.
பூ+கதவு = பூங்கதவு(பூவைப் போன்ற கதவு – பண்புத்தொகை)/பூக்கதவு (பூவினால் ஆன கதவு – வேற்றுமைத்தொகை)
இதுபோன்ற நுண்ணிய வேறுபாடுகள் ‘கள்’ விகுதியிலும் வரும் என்று எண்ணுகிறேன்.
(எ.கா) எழுத்துகள் – Writings, எழுத்துக்கள் – Letters
பொருள்கள் – Meanings, பொருட்கள் – Things
கள் வரலாறு:
‘கள்’ என்ற விகுதி முதலில் அஃறினை பன்மையைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப் பட்டதாம். பிற்காலத்தில் அது மெல்ல மெல்ல மற்றச் சொற்களின் பன்மையையும் குறிக்க தொடங்கிவிட்டது. அவ்வளவு ஏன்? ‘அர்’ என்பதே பன்மை விகுதியாகக் கருதப்படும்போது, ‘கள்’ விகுதி ‘அர்’-உடன் சேர்ந்து ‘அர்கள்’ என்று இரட்டைப் பன்மையாக(மிகைதிருத்தம்) வரத்தொடங்கிவிட்டது. (எ.கா: காதலர்கள்) இதுபோன்ற சொற்கள் இப்பொழுது நிறைய புழக்கத்தில் உள்ளது.
இந்தக் கட்டுரைக்கு தரவுகள் தந்து உதவிய @kryesக்கு நன்றிகள்.
இது குறித்த @kryesஇன் பதிவு இது – ’கள்’ளுண்ட தமிழ்: வாழ்த்து-க்களா?வாழ்த்து-களா??
psankar
மே 23, 2012
வாழ்த்துகள் தான் சரியாகவே இருந்து விட்டு போகட்டும். அப்போது வாழ்த்துக்கள் என்பது இன்னிசை அளபெடையால் சரி என்று கருதக் கூடாதா ?
LikeLike
balaraman
மே 23, 2012
//வாழ்த்துகள் தான் சரியாகவே இருந்து விட்டு போகட்டும்// ஐயா, இது இலக்கணம். நீங்க நினைக்கிறது சரின்னோ, நான் நினைக்கிறது சரின்னோ எடுத்துக்க முடியாது.
LikeLike
Ruban
மே 23, 2012
EXCELLENT 🙂
LikeLike
balaraman
மே 23, 2012
நன்றி. 🙂
LikeLike
சாதாரணன்
மே 23, 2012
//வாழ்த்துகள்’ என்ற சொல்லை ஒரு வினைத்தொகையாக பார்க்கலாம்! (‘ஊறுகாய்’ போல – ஊறுகின்ற காய், ஊறின காய், ஊறும் காய் என முக்கால வினைகளையும் குறிக்கும்)
வாழுகின்ற துகள், வாழ்ந்த துகள், வாழும் துகள் என்று உணர்த்தி வரும் இந்தச் சொல்லை ‘நுண்ணுயிரி’ என்று பொருள் கொள்ளலாமா? //
ஊறுகாய் தானே.. ஊறுக்காய் இல்லையே? வாழ்த்துகள்,வாழ்துகள்,ஏற்கனவே இருக்கும் குழப்பத்தில் ஏன் இந்த வினைத்தொகை குழப்பம் வேறு?
மற்றபடி அருமையான பதிவு! 🙂
LikeLike
balaraman
மே 24, 2012
//வேண்டுமென்றே தவறாகப் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால்// இதைக் கவனிக்கவில்லையா? 🙂
LikeLike
சாதாரணன்
மே 23, 2012
Reblogged this on சாதாரணன் . . . and commented:
Must Read
LikeLike
bala
மே 23, 2012
nanru
LikeLike
balaraman
மே 24, 2012
நன்றிங்க.
LikeLike
ajithtogo
செப்ரெம்பர் 18, 2012
புள்ளி வைத்த எழுத்தில் ஒரு வார்த்தை ஆரம்பிக்கலாமா? இலக்கணப்படி அது சரியா? உதாரணத்துக்கு க்ருஷ்ணா என்று எழுதுவதா அல்லது கிருஷ்ணா என்று எழுதுவதா?
LikeLike
balaraman
செப்ரெம்பர் 18, 2012
இல்லைங்க. இலக்கணப்படி தமிழில் எந்த ஒரு சொல்லும் மெய்யெழுத்தில் தொடங்காது.
‘கிருஷ்ணா’ என்பதே சரி. சிலர் அதிலும் கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து ‘கிருட்டிணன்’ என்று சொல்வார்கள்.
LikeLike
sury
ஜூன் 26, 2013
வாழ்த்துக்கள் என்பதா ? வாழ்த்துகள் என்பதா ?
வாத்துகள் என்பதா ? வாத்துக்கள் என்பதா என்ற சர்ச்சை ஏன் வரவில்லை ?
வாழ்த்து என்பது ஒரு பெயர்ச்சொல் வாழ்த்து என்பது வினைச்சொல்லுமே ஆம்.
வாழ்த்து பெயர்ச்சொல் எனினும் வாழ்த்துவதான செயலைச் சொல்லும் சொல்.
ஆங்கிலத்தில் சொல்லினை இரண்டு விதமாகப் பிரிக்கிறோம்.
ஒன்று ப்ராபர் நௌன். இன்னொன்று கலெக்டிவ் நௌன்.
இது இரண்டாம் வகையைச் சார்ந்தது என்பதே எனது துணிபு.
இதுவா அதுவா எது ?
ஒன்றும் வேண்டாம்.
நான் உங்களை மனமுவந்து வாழ்த்தி மகிழ்கிறேன்.
தங்கள் தமிழ்த் தொண்டினைப் பாராட்டுகிறேன்.
சுப்பு தாத்தா.
LikeLike
balaraman
ஜூன் 26, 2013
மிக்க மகிழ்ச்சி சுப்பு தாத்தா.
LikeLike
Appadippodu
ஏப்ரல் 5, 2014
ஐயா, “இது இலக்கணம். நீங்க நினைக்கிறது சரின்னோ, நான் நினைக்கிறது சரின்னோ எடுத்துக்க முடியாது” என்று ஒருவருக்கு நீங்கள் பதிலளித்திருக்கிறீர்கள். மிகச்சரி. “எழுத்துக்கள்”, “வாழ்த்துக்கள்” போன்ற சொற்களை பல தமிழறிஞர்கள் பயன்படுத்தி இருந்தாலும் நீங்கள் சொல்லியபடி இது இலக்கணம் ஆதலால் அவர்கள் நினைத்தது சரி என்று எடுத்துகொள்ளமுடியாது. வன் தொடர் குற்றியலுகரத்தைத் தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது என்று சிலர் சொல்லுகிறார்கள் (எனக்கு இலக்கணம் தெரியவில்லை மன்னிக்கவும்). அது சரி என்றால் நீங்கள் எடுத்துக்காட்டிய அறிஞர்களும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் சொல்வதும் தவறு என்றுதான் கொள்ளவேண்டும்.
“முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்”
என்று கண்ணதாசன் பாடினார். ஆனால் தேவைப்பட்டபோது இசைக்காக இலக்கணத்தை விட்டுக்கொடுப்பது மரபே. எனவே முத்துக்கள் வாழ்த்துக்கள் இவை சரி எனக் கொள்ள இயலாது என்றே நான் கருதுகிறேன்.
அறிஞர்களின் பயன்பாட்டை எடுத்துக்காட்டாமல் இலக்கணத்தைச் சுட்டிக்காட்டுவீர்களா?
ஆனாலும் உங்கள் தமிழ் அறிவையும் தொண்டையும் மிகவும் வாழ்த்துகிறேன்.
LikeLike
balaraman
ஏப்ரல் 5, 2014
//வன் தொடர் குற்றியலுகரத்தைத் தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது என்று சிலர் சொல்லுகிறார்கள் (எனக்கு இலக்கணம் தெரியவில்லை மன்னிக்கவும்).// அவங்ககட்ட இந்தக் கேள்விய -> //அறிஞர்களின் பயன்பாட்டை எடுத்துக்காட்டாமல் இலக்கணத்தைச் சுட்டிக்காட்டுவீர்களா?// கேட்டீங்களா?! அதற்கு என்ன பதில் தந்தார்கள் அந்தச் சிலர்?
//“முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்”// இந்தப் பாடல் எழுதுனவர எடுத்துக்காட்டாச் சொல்லல. தொல்காப்பியத்துக்கு உரை கண்ட நச்சினார்க்கினியரா இலக்கணத்தைத் தன் விருப்பம் போல் பயன்படுத்துவார்?
//ஆனாலும் உங்கள் தமிழ் அறிவையும் தொண்டையும் மிகவும் வாழ்த்துகிறேன்.// மிக்க நன்றி…
LikeLike
Appadippodu
ஏப்ரல் 5, 2014
ஐயா, அவர்கள் முற்றிலுமாக இலக்கணத்தைத் தராவிட்டாலும் (விதியைத் தராவிட்டாலும்) நீங்கள் விளக்கியதுபோல் இல்லாமல் இலக்கணத்தைச் சுட்டிக்காட்டி விளக்க முயன்றிருக்கிறார்கள். அதனால்தான் உங்களிடம் கேட்டேன். இருந்தாலும் அவர்களிடமும் கேட்கிறேன்.
நான் கண்ணதாசனை எடுதுக்காட்டியதைச் சற்றுத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள். நானும் நச்சினார்க்கினியர் பிழை செய்திருப்பார் என நம்பவில்லை. ஒருவேளை பின்னர் பதிப்பித்தவர்கள் பிழை செய்திருக்கலாம் அல்லவா? நான் சொல்லவந்தது இலக்கணத்தைச் சுட்டிக்காட்டவேண்டுமே ஒழிய அறிஞர்களின் பயன்பாட்டைச் சுட்டிக்காட்டுவது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல என்பதைச் சொல்லத்தான்.
தமிழ் இலக்கணம் – 1 என்று பெயர் வைத்து எழுதியுள்ள உங்களைத்தானே எனக்குக் கேட்கத் தோன்றும், நண்பரே!
LikeLike
balaraman
ஏப்ரல் 6, 2014
//ஐயா, அவர்கள் முற்றிலுமாக இலக்கணத்தைத் தராவிட்டாலும் (விதியைத் தராவிட்டாலும்) நீங்கள் விளக்கியதுபோல் இல்லாமல் இலக்கணத்தைச் சுட்டிக்காட்டி விளக்க முயன்றிருக்கிறார்கள். // நீங்க கூறும் முதல் இரண்டு வரிகளே ஒன்றுக்கொன்று முரணா இருக்கே. நானும் விதியை முழுமையா தரலைன்னாலும் இலக்கணத்தோடு தான விளக்கியிருக்கேன்? ‘க்’ வராது என்பதற்கு அவர்கள் ‘இலக்கணத்தோடு’ விளக்கியத்தை இங்கு பகிர முடியுமா? அனைவருக்கும் உதவியாய் இருக்கும்.
//நான் சொல்லவந்தது இலக்கணத்தைச் சுட்டிக்காட்டவேண்டுமே ஒழிய அறிஞர்களின் பயன்பாட்டைச் சுட்டிக்காட்டுவது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல என்பதைச் சொல்லத்தான்.//
தமிழர்ஞர்கள் பயன்பாட்டை மட்டும் நான் கூறவில்லை. ‘கள்’ விகுதியே இந்தச் சொற்களுக்கு பயன்படுத்தப்பட்டது தொல்காப்பியம் காலத்துக்கு பின்னர் தான். பின்பு எப்படி அதில் விளக்கம் இருக்கும்? அவ்வளவு ஏன்? இதே காரணத்தால் ‘கள்’ விகுதி சேரும் போது ‘க்’ வராது என்பதற்கும் அதில் விளக்கம் இருக்க வாய்ப்பில்லை.
அப்படியிருக்க அதற்கடுத்த படியாக தொல்காப்பிய உரையைத் தானே நம்ப முடியும்?
//ஒருவேளை பின்னர் பதிப்பித்தவர்கள் பிழை செய்திருக்கலாம் அல்லவா?//
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தையும், நச்சினார்க்கினியர் உரையையும் நம்பாத நீங்கள் ‘அந்தச் சிலரை’ மட்டும் எளிதாக நம்பியது எனக்கு வியப்பாக இருக்கிறது.
//தமிழ் இலக்கணம் – 1 என்று பெயர் வைத்து எழுதியுள்ள உங்களைத்தானே எனக்குக் கேட்கத் தோன்றும், நண்பரே!//
கேட்பதில் தவறில்லை. ஐயமிருப்பின் எல்லோரிடமும் கேளுங்கள். நன்றி. 🙂
LikeLike
Appadippodu
ஏப்ரல் 8, 2014
//வராது என்பதற்கு அவர்கள் ‘இலக்கணத்தோடு’ விளக்கியத்தை இங்கு பகிர முடியுமா? //
வன் தொடர் குற்றியலுகரத்துக்குப்பின் புள்ளிவைத்த எழுத்து வராது என்பதே. இது சரியான கருத்தா என அறியவே நான் முனைகிறேன்.
//‘கள்’ விகுதியே இந்தச் சொற்களுக்கு பயன்படுத்தப்பட்டது தொல்காப்பியம் காலத்துக்கு பின்னர் தான். பின்பு எப்படி அதில் விளக்கம் இருக்கும்? அவ்வளவு ஏன்? இதே காரணத்தால் ‘கள்’ விகுதி சேரும் போது ‘க்’ வராது என்பதற்கும் அதில் விளக்கம் இருக்க வாய்ப்பில்லை.//
என்ன ஐயா சொல்லுகிறீர்கள்! கள்’ விகுதியே வன் தொடர் குற்றியலுகரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது தொல்காப்பியம் காலத்துக்கு பின்னர் தான் என்கிறீர்களா? விந்தையாக இருக்கிறது!
//தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தையும், நச்சினார்க்கினியர் உரையையும் நம்பாத நீங்கள் ‘அந்தச் சிலரை’ மட்டும் எளிதாக நம்பியது எனக்கு வியப்பாக இருக்கிறது.//
நான் எங்கு அவர்களை நம்பினேன்? என் பின்னூட்டங்களைத் திரும்பப் படித்துப் பாருங்கள்! அவர்களும் விதியைச் சொல்லவில்லை, எனக்கு விதியைச் சுட்டிக்காட்டுவீர்களா என்றுதானே உங்களைக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். என்ன அய்யா!
//ஐயமிருப்பின் எல்லோரிடமும் கேளுங்கள்.//
பிறரிடமும் கேட்டிருக்கிறேன். இலக்கண விதியைக் கண்டுபிடித்தால் நிச்சயம் உங்களிடம் பகிர்ந்துகொள்ளுகிறேன்.
LikeLike
balaraman
ஏப்ரல் 8, 2014
சுருக்கமா சொல்றேன். ‘கள்’ விகுதி பற்றிய விதி தொல்காப்பியத்தில் இல்லை. அதுபோக, ‘வன்தொடர் குற்றியலுகரத்தைத் தொடர்ந்து வல்லின மெய் மிகும்/மிகாது’ங்கறது புணர்ச்சி விதிகள்ல வரும். அதாவது இரண்டு தனித்தனி சொற்கள் சேரும் போது பார்க்க வேண்டிய விதி. அதை இதில் பேசுவதே தவறு. புரிதலுக்கு நன்றி.
LikeLike
யாழினி
ஜனவரி 15, 2015
நானும் கள் என்பதே மயக்கம்.. தமிழ் இலக்கணத்திலும் அதுவே…
LikeLike
Saran
ஜனவரி 9, 2016
வாழ்த்து நன்றி இந்த சொற்களுக்கெல்லாம் பன்மை உண்டா என்பதே தெளிவில்லாதபோது வாழ்த்து(க்கள்ளா) , வாழ்த்து(களா) என்பதை எவ்வாறு சொல்லிவிடவியலும் முதலில் ஐயா எமக்கு ஒருமை பன்மை உள மற்றும் இல சொற்களை இங்கு நவிலுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் மேலும் பிரித்தெழுதுதல் சேர்த்தெழுதுதலில் உள்ள குழப்பங்களையும் தீர்த்துவையுங்கள் என்பது என் மேலான வேண்டுகோளும் உதாரணம் புல் + தரை = புற்றரை இதுபோல் பல சொற்களையும் தந்தருளுங்கள் ஐயா
LikeLike
balaraman
ஜனவரி 11, 2016
ஆம் சரண். பன்மை தேவையில்லாத சொற்களுக்கும் நாம் பன்மை விகுதிகள் பயன்படுத்துகிறோம். அப்படி பயன்படுத்தும் நிலையில் ஏற்படும் குழப்பங்களுக்கான விளக்கமே இந்தப் பதிவு. உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்க நான் இன்னொரு பதிவு தான் எழுத வேண்டும்.
LikeLike
Mohammed Asif
பிப்ரவரி 11, 2016
அருமையான பதிவு, நன்றி.
மேலும் தொடர….வாழ்த்துக்கள்.
LikeLike
balaraman
பிப்ரவரி 15, 2016
மிக்க நன்றி! 🙂
LikeLike
Jegadeesh West Neyoor
செப்ரெம்பர் 17, 2016
vanakam tholar,
nalla pathivukal..
enaku sila varthaikal tamil thana ena santhekam ullathu
1. Pannu -Sei
2. Romba – Athigam
3. Jasthi – Kooduthal
4. Kammi – Kuraivu
5. Moonchi – Mukham
edathu pakkam ulla varthaikal ellam tamil varthaikal thana?
LikeLike
தாமரை
ஒக்ரோபர் 31, 2017
இந்த தகவல்கள் விலைமதிப்பற்றவை.நன்றி.
LikeLike
லஷ்மி
ஜூன் 27, 2020
க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துக்களுக்கு பின் வரும் உ கார எழுத்தை தொடர்ந்தை புள்ளி வைத்த எழுத்து வராது (உதாரணமாக வாக்குகள், கணக்குகள் ) எனவே வாழ்த்துகள் என்பதே சரி என நான் நினைக்கிறேன்
LikeLike
L.Sankaranarayanan
ஜூலை 26, 2020
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/yATg9KLZU10
LikeLike